டில்லி:

5வது கட்ட தேர்தல் நடைபெறும் அமேதி தொகுதி உள்பட நாடு முழுவதும் 51 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக தேர்தல் பிரசாரம் கடந்த 4ந்தேதி மாலையுடன் முடிவடைந்தது. அதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டும் செல்லும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல வாக்குப்பதிவு தொடங்கியது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்றைய வாக்குப்பதிவானது, உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  போட்டியிடும் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதி,  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, ஸ்மிரிதி இரானி, முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா போட்டியிடும் தாவ்ராரா, உத்தரபிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிர்மல் காத்ரி போட்டி யிடும் பைசாபாத், மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் ரத்தோர், ஜெயந்த்சின்கா, அர்ஜின்ராம் மேக்வால்  ஆகிய தொகுதிகள் முக்கியமான தொகுதிகள். அத்துடன்  நாடு முழுவதும்   51 தொகுதி களில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார் (5 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்). ஜார்கண்ட் (4 தொகுதிகள்), மத்திய பிரதேசம (7 தொகுதிகள்), ராஜஸ்தான் (12 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (7 தொகுதிகள்) என 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த 51 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள் என்றும்,  அதில் ஆண் வாக்காளர்கள் 4.63 கோடி பேர் ஆவார்கள். 4.12 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதுபோல 51 தொகுதிகளிலும் மொத்தம் 96,088 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால், வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.