தூத்துக்குடி

பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று ஆண், பெண், பிரபலம், பொதுமக்கள் என பேதமின்றி பரவி வருகிறது.   தற்போது வந்துள்ள செய்தியின்படி கொரோனா தொற்று பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிகழ்வு தமிழகத்தில் தூத்துக்குடியில் நடந்துள்ளது.   அங்குள்ள டேவிஸ்புரத்தை சேர்ந்த 7 நாட்களான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

டேவிஸ்புரத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் மாதாந்திர  சோதனைக்குச் சென்றுள்ளார்.   அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்குக் கடந்த 29 ஆம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையைச் சோதித்ததில் முதலில் நெகடிவ் எனக் காணப்பட்டு 5 நாட்கள் சென்று நேற்று கொரோனா உறுதி ஆனது.   அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி  இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.   குழந்தையின் இதயத் துடிப்பும் சுவாசமும் நல்ல நிலையில் உள்ளதால் ஆபத்து இல்லை எனத் தெரிய வந்துள்ளது.