ஆம்ஸ்டர்டாம்:
தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை நெதர்லாந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் வந்திறங்கிய பயணிகளில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கண்டறியப்பட்டுள்ள ‘ஓமிக்ரான்’ எனும் புதுவகை கொரோனா கிருமி அவர்களைத் தொற்றியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் கூடுதல் பரிசோதனை செய்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு ஆம்ஸ்டர்டாம் வந்திறங்கிய இரு விமானங்களில் ஏறத்தாழ 600 பயணிகள் இருந்தனர். கூடுதல் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்காக அவர்கள் விமான நிலையத்தில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

கிருமித்தொற்று உறுதியான பயணிகள், அருகிலுள்ள உணவகத்தில் தனிமைப்படுத்தப்படுவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அவர்களைத் தொற்றியுள்ள கிருமி, ‘ஓமிக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதுவகை கிருமியா என்பதைக் கண்டறிய நாங்கள் வேகமாக ஆய்வு நடத்தி வருகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் நெதர்லாந்து அரசாங்கம் நேற்று தடை விதித்தது.அந்நாடுகளிலிருந்து ஏற்கெனவே நெதர்லாந்துக்குப் புறப்பட்டுவிட்ட பயணிகள், அங்கு வந்திறங்கியதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.