மும்பை: வரக்கூடிய 6 மாதங்களில் இதுவரை இல்லாத அளவு வங்கி வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2020ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார கொள்கைகள் குறித்த மாநாடு நடைபெற்றது. அதில் பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளன.
அவை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. ஆகையால் வரக்கூடிய 6 மாதங்களில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. நாம் இப்போது மோசமான சூழலில் உள்ளோம்.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் மட்டுமே ஆறுதல் தரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வேளாண்மையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நீண்ட காலத்துக்கு பயன் தருமாறு இருக்க வேண்டும் என்று பேசினார்.