சென்னை: தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான 2வது கட்ட கலந்தாய்வு நேற்று (4ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், முதல்நாளான நேற்று அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 47அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் 18-ந்தேதி தமிழக்ததில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. முன்னதாக தமிழகஅரசு கொண்டு வந்த

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தின்படி,  முதலாவதாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, நவம்பர் 18 முதல் 21-ந் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் 399 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றனர்.  பின்னர்  பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.
இதையடுத்து காலியாக காலியாக உள்ள மருத்துவ படிப்பு இடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீடு வழங்கி, அதில் இருந்து மீண்டும் திரும்ப பெறப்பட்ட இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு  நேற்று (ஜனவரி 4ந்தேதி) தொடங்கியது.  முதல் நாளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் இடங்கள் நிரப்பப்பட்டன.   இதில், 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி,  7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்தும் சுயநிதி கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறி, இடங்களை திரும்ப கொடுக்க முயன்ற மாணவ மாணவிகளுக்கு அரசே கட்டணம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழகஅரசு கொண்டுவந்துள்ள 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு சட்டத்தின் பயனாக நடப்பாண்டில்  446 அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, இன்றுமுதல்  பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு  தொடங்குகிறது. வருகிற 11-ந் தேதி காலை வரை நடைபெற இருக்கிறது.