டெல்லி: நாடு முழுவதும் 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என்று  ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

5ம் கட்டமாக சில தளர்வுகளுடன் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள் இயக்கப்படுகின்றன.  புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம், 58 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: ஒட்டு மொத்தமாக 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் தேவை குறைந்து வருகிறது. ஆகையால் 250 ரயில்கள் தேவை என்ற நிலை மாறி இப்போது 137 ரயில்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது. 2 நாட்களில் வெறும் 56 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன என்றார்.