கார்டூம்

சூடான் நாட்டில் ஏற்பட்ட கடும் மோதலால் ஐநா அமைதி பாதுகாப்பாளர் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உள் நாட்டிற்குள்ளேயும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர்.

இதுவரை இந்த மோதலில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது.,

சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதில் மோதல் ஏற்பட்டது. அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், ஐ.நா. அமைதி காப்பாளராகச் செயல்பட்டு வந்த கானா நாட்டை சேர்ந்த வீரர் உள்பட 32 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்து நிலைமை சீராகி, அமைதியாக காணப்படுகிறது.