தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தைப் பராமரிக்கவும் அறிவுரை வழங்கியது.  தமிழக அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது.  இன்று வேதாந்தா மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.

நேற்று முன் தினம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது’ என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையொட்டி 98 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தைப் பராமரிக்கவும் அனுமதி அளிக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

தூத்துக்குடி காவல் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், மனு கொடுக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்தனர்.  ஆயினும், தூத்துக்குடி அய்யனடைப்பு, லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் அவர்கள் 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று ஸ்டெர்லைட் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதால், காவல்துறையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.