துரை

சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை 5.52 மணிக்கு நடந்தது. இதை ஒட்டி, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இரு கரையைத் தொட்டு தண்ணீர் ஓடும் நிலையில்தான் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் எழுந்தருளினார். இந்த காட்சியைப் பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.  இதையொட்டி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம், வைகை வடகரை, தென்கரை மற்றும் ஏவி மேம்பாலம், ஓபுளாபடித்துறை மேம் பாலம், யானைக்கல் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

சுவாமியை பலத்த பாதுகாப்புக்கு இடையில் இளைஞர்கள், பெண்கள் எனப் பக்தர்கள் முண்டியடித்து சுவாமியைப் பார்த்தனர். இதில் ஆழ்வார்புரம் பகுதியே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.  ஆயினும், உற்சாக மிகுதியில் யானைக்கல் தரைப்பாலம் அருகிலுள்ள தடுப்பணையில் தேங்கிய தண்ணீரில் பக்தர்கள் சிலர் குதித்து விளையாடினர்.  கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பின், தடுப்பணை பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதந்தது தெரியவந்தது.

காவல்துறையினர் அந்த  உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் விசாரணையில், அவர் தெற்கு மாசி வீதியைச் சேர்ந்த நல்லமாயன் என்றும், திருவிழா பார்க்க வந்தபோது, தடுப்பணை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.   இதனிடையில், மதியம் தடுப்பணை பகுதியில் மேலும் இருவரின் உடல் தண்ணீர் மிதப்பது காவல்துறைக்குத் தெரிந்தது.

இவர்கள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் மதுரை மாவட்டம், விளாச்சேரி சுண்ணாம்புகாளவாசல் பகுதி ஜெயக்குமார் மகன் பிரேம்குமார் எனவும் மற்றொருவரின் பெயர், முகவரி குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். இவர்களும் சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.