சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருந்தது. தீவிர சிகிச்சைகள், தொடர் கண்காணிப்பு காரணமாக அவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

இந் நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு அந்த பாதிக்கப்பட்ட நபர் மார்ச் 12ம் தேதி வேலை தேடி வந்திருக்கிறார். அவருக்கு வயது 20. ரயிலில் அவர் பயணிக்கும் போது எந்த உடல் உபாதைகளும் ஏற்படவில்லை.

தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றார்.