உ.பி. மாநிலம் லக்னோ-வில் இருந்து இந்த மாதம் 17 ம் தேதி தென் இந்திய ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 5 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர் லேசான காயங்களுடன் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர் பிழைத்தவர்களில் 28 பேருக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து உ.பி. செல்லும் அவர்களை அம்மாவட்ட ஆட்சியரிடம் தமிழக அரசு அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்.

இவர்களை வழியனுப்ப தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்திருந்தார் அப்போது அவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழச் செய்தது.

63 பேருடன் ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் பெட்டி திருவனந்தபுரம் வழியாக மதுரை வந்தடைந்த போது வேறு ஊருக்குச் செல்ல கழட்டி விடப்பட்டது.

கழட்டி விடப்பட்ட பெட்டியில் உணவு சமைப்பதற்காக எடுத்து வந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது.

இந்த நிலையில் லக்னோ ரயில்வே காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ரயில் பெட்டிக்குள் சிலிண்டர் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்று இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.