கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத் (21) என்பவரை 27 வயது இளைஞர் ஹக்கீம் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், ஹக்கீம் அவ்வப்போது அர்ஷாத்தை தாக்குவது வழக்கம். “ஹக்கீம் இங்கு வியாபாரம் செய்து வந்தார். அவருடன் அவரது உறவினரான அர்ஷாத் என்பவரும் வேலை செய்து வந்தார். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர். இதற்கு முன்பும் அவர் அர்ஷாத்தை தாக்கியிருக்கிறார். ஆனால், இம்முறை அது உயிர் பலியாகிவிட்டது” என்று போலீசார் தெரிவித்தனர்.

நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் அர்ஷாத்தை, ஹக்கீம் அடித்துள்ளார். நாயின் பெல்ட் மற்றும் தடிகளைக் கொண்டு தாக்கியுள்ளார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

அர்ஷாத்தின் உடலில் காயங்கள் இருந்தபோதிலும், உறவினர் வீட்டின் மாடியில் இருந்து விழுந்ததாக முதலில் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஹக்கீம் கூறினார்.

ஆனால், அர்ஷாத் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து நடைபெற்ற விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.