டெல்லி: 4 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.  கடந்த 24மணி நேரத்தில் 3,230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 118 நாட்களில், இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் 37 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 4255 பேர் குணமடைந்த நிலையில்,  இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவுக்கு  உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 967 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.