பணத்துக்காக 51 வயது மனைவியை கொன்ற 26 வயது இளைஞர்

பணத்துக்கு ஆசைப்பட்டு 51 வயது பெண்ணை மணந்த 26 வயது இளைஞர்.. நண்பர்கள் கிண்டல் செய்ததால் மின்சாரம் பாய்ச்சி கொன்ற பயங்கரம்..

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காரக்கோணம் பகுதியில் வசித்து வருபவர் அருண்.

இவருக்கும் ஷாகாகுமாரி என்ற பெண்ணுக்கும் இரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

அருணுக்கு வயது 26 தான் ஆகிறது.

ஆனால் மனைவி குமாரிக்கு வயது 51.

குமாரி, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். பணத்துக்கு ஆசைப்பட்டு குமாரியை, அருண் கல்யாணம் செய்துள்ளார்.

இந்த ஜோடியின் திருமண ஆல்பம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பலரால் விமர்சிக்கப்பட்டது.

அருணின் நண்பர்களும் ‘’ கிழவியைப் போய் கல்யாணம் செய்துள்ளாயே’’ எனக் கிண்டல் செய்துள்ளனர்.

அப்போது முதல், மனைவிக்கும், தனக்கும் உள்ள வயது வித்தியாசம் அருணை உறுத்திக் கொண்டே இருந்தது.

இதனால் பித்துப் பிடித்தவர் போல் காணப்பட்ட அருண், மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால் குமாரி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் வீட்டில் தினமும் சண்டை நடந்து வந்துள்ளது.

நேற்று அதிகாலையில் மின்சாரத்தைப் பாய்ச்சி மனைவி குமாரியைக் கொலை செய்த அருண், மின்சாரம் தாக்கி அவர் இறந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் மனைவியைக் கொன்றதை அருண் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அருணை போலீசார் கைது செய்துள்ளனர்.

வயது வித்தியாசம் காரணமாக , புதுப்பெண்ணைக் கணவன் கொலை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-.பா.பாரதி.