டில்லி

நாட்டில் விற்கப்படும் காய்ச்சல், இதய பாதிப்பு மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை என  மருந்து கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.  இந்த ஆய்வில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அவ்வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது.  அதாவது காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன  இந்த தரமற்ற மருந்துகளின் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாசல பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.