சென்னை:
மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2570 செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இவர்களது பணிக்காலம் 6 மாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், டிரேட் சென்டர் உள்பட சில பள்ளிகளிலும் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால், நோயாளிகளை கவனிக்க தேவையான சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள் இல்லாத அவலம் நீடித்து வருகிறது. இதையொட்டி, தற்காலிகமாக செவிலியர்களை பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள  உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள். 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து , 6 மாத காலங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2570 செவிலியர் களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள் , ஆணை கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கான தலா 40 செவிலியர்களும் ,தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.
இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.