வேலூர்:
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப் பாண்டியன் 2530 வாக்குகள் பெற்றுள்ளார். இதை அவர் சாதனையாக தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் உள்பட சில கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அனைவருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் செல்லப்பாண்டியன். இவர் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஒன்றை அமைத்து, மதுகுடிப்போருக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நடைபெற்று முடிந்த வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனும் ஒருவர்.
வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளன. இதை பெருமிதமாக நினைத்து, அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளர்.
அதில், தனக்கு 2530 வாக்குகள் அள்ளித் தந்தற்கு நன்றி தெரிவித்து உள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை பாதங்களில் சமர்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.