டெல்லி: இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இருந்தாலும் பாதிப்பு மிதமான அளவிலேயே இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2ஆண்டுகளாக மிரட்டி வரும் கொரோனா தொற்று, தற்போது உருமாறிய நிலையில், ஒமிக்ரான் என்ற பெயரில் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த  கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

ஒமிக்ரான் வைரஸ் தற்போது  இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி உள்ளது. நேற்று குஜராத் மாநிலத்தில் 3வயது குழந்தை உள்பட 2 பேருக்கு  ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.