டெல்லி: முதுநிலை படிப்புக்கான கியூட் (CUET) நுழைவுத்தேர்வை ஏற்க 22 மத்திய பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்பு படிப்புகளில் சேர வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) CUET – PG தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து, அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் UGC தொடங்கியது. இது துவரை தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் ஒரே நுழைவுத் தேர்வாக CUET – PG என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று UGC அறிவித்தது.

மத்தியஅரசின் கீழ் நாடு முழுவதும்  54 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளது. இதில்,  டெல்லி JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே CUET – PG தேர்வின் படி மாணவர் சேர்க்கையை நடத்துவதாக ஒப்புதல் வழங்கி உள்ளது. மீதமுள்ள  22 மத்திய பல்கலைக்கழகங்கள் CUET – PG தேர்வை வரும் கல்வியாண்டில் ஏற்க மறுத்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் கியூட் தேர்வை ஏற்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதை யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முதுநிலை நுழைவு தேர்வுக்கு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது 22 மத்திய பல்கலைக்கழகங்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.