சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) குருப்-1 தேர்வுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வினை எழுதிய ராம்குமார் என்பவர் தேர்வில் தேர்ச்சி பெற விடைத்தாளினை மாற்றி வைத்து முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உதவியதாக கருணாநிதி என்பவரும், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் சிலர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதன் காரணமாக, தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், விடைத்தாள் மாற்றி வைத்த விவகாரத்தில் தான் ஈடுபடவில்லை என்றும், முறையாக விசாரணை நடத்தாமல் ராம்குமாரிடம் வேலை பார்த்த தன் மீது காவல்துறை தவறாக வழக்குப்பதிவு செய்திருப்பதால், இது தொடர்பான கீழமை நீதிமன்ற வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, கடந்த 2016-ல் நடைப்பெற்ற டிஎன்பிஎஸ்சி குருப் – 1 தேர்வில் விடைத்தாள் மாற்றி வைத்து மோசடி செய்த வழக்கில் இதுவரை 65 சாட்சிகள் சேர்க்கப்பட்டு அதில் 10 பேரிடம் சாட்சி விசாரணையை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நடத்தி முடித்துள்ளது எனத் தெரிவித்தார். அதனால், வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை ஏற்க கூடாது எனவும் வாதத்தை முன் வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் விடைத்தாள் மாற்றி மோசடி செய்தது தொடர்பான வழக்கை 6 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]