Rs 200 notes may only be available at banks, not ATMs : RBI

 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 200 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகள் மூலமாக மட்டுமே விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் புதிய 200 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பது என்றால், அதற்காக நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் இயந்திரங்களை மாற்றி வடிவமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்திருப்பதாக மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்ததை அடுத்து, புதிய 500 மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றின் அளவுக்குத் தகுந்தவாறு ஏடிஎம் இயந்திரங்களை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார்கள். அப்படி ஒரு நெருக்கடியை மக்களுக்கு இனி ஏற்படுத்தக் கூடாது என்பதால், புதிய 200 ரூபாய் நோட்டை, வங்கிக் கிளைகள் மூலமாக மட்டுமே விநியோகிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.