டெல்லி: விவசாயிகள் பயன்பெறும் வகையில்  பா.ஜ.க அரசு கொண்டுவந்த  பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் தகுதியில்லாத விவசாயிகள் சுமார் 20 லட்சம் பேருக்கு முறைகேடாக ரூ.1,364 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ ) மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி திட்டத்தை ‘பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம்’ என்ற பெயரில் மோடி அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான போலி பயனர்கள் சேர்க்கப்பட்டு, முறைகேடாக பணம் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்திலும்   சுமார் 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது.  இநத முறைகேடு தொடர்பாக 37 அரசு  அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டு இருப்பதுடன்,  80 அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் தெரிவித்து உள்ளார். அதுபோல  பா.ஜ.க ஆட்சி நடக்கும் இமாசலப் பிரதேசத்திலேயே, சுமார் 11 கோடியே 95 லட்சம் ரூபாய் அளவிற்கு, மோசடி நடந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்தியஅரசுக்கு விண்ணப்பித்து தகவல் பெற்றிருந்தார். அவருக்கு கிடைத்த தவலில்,  , “பி.எம் கிசான் திட்டத்தின் மூலம் இரு பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது.

தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துவோர் என்றும் மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்ற பிரிவில் வரும் விவசாயிகள் .

கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 2020, ஜூலை 31 ஆம் தேதி வரை தகுதியற்ற விவசாயிகளுக்கும், வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கும் சுமார் 1,364.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.