டெல்லி: டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் நடமாடிய  2 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சாராய் கலேகான் என்ற பகுதியில் உள்ள மில்லினியம் பார்க் அருகே போலீசார் மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 பிஸ்டல் துப்பாக்கிகள், தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 20 வயது நிரம்பிய அப்துல் லதீப், முகம்மது அஸ்ரப் என்பது தெரிய வந்தது.

2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் சில இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.