கொழும்பு

லங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவை விமர்சித்த 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா அந்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இங்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.  இதையொட்டி நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இலங்கை அரசு அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் திணறி வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. மேலும் இலங்கை மக்கள் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எனத் தொடர்ச்சியாக இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்துக்கும், நிதி அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என மின் துறை அமைச்சர் உதய கம்மன்பில மற்றும், தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.   இதனால் இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த இரு அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.