சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வார்டு வரையறை காரணமாக 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த தேர்தலை செப்டம்பர் 15ந்தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியதாவது:

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.  வாக்குப்பதிவுக்காக 14,573 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ந்தேதி தொடங்கி செப்டம்பர் 22-ம் தேதி வரை நடைபெறும்.  வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெறப்படும்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை   செப்டம்பர் 23-ம் தேதி

 வேட்பு மனுவைத் திரும்பபெற கடைசி நாள்  செப்டம்பர் 25ந்தேதி

முதற்கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் 7921 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறும்

2ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் 6652 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் நடைபெறும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்கலாம்.

அக்டோபர் 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

அக்டோபர் 20ந்தேதி வெற்றி பெற்றவர்கள் உள்ளாட்சி மன்றத்தில் பதவி ஏற்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த  நடைமுறைகள்  அக்.16-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

தேர்தல் பார்வையாளர்களாக 9 மாவட்டங்களுக்கும் தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு  கூறினார்.