சென்னை: கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைவரும் திருப்திபடும் வகையிலேயே மதிப்பெண் கணக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் கூறினார்.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மதிப்பெண் கண்கீடுவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக பிளஸ்2 ,மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு ழுழ ஒன்றை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் மதிப்பெண் கண்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 சதவீதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 சதவீதம், 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் என்றும் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் அன்பின் மகேஷ்,  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு 12 முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதிலிருந்து 2 முறைகள் தற்போது எடுத்துக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கு கொரோனா பரவல் குறைந்து நிலைமை சீரடைந்ததும் தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும்.

பெருந்தொற்று இல்லாத நேரத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட்டிருப்பதால், அதிலிருந்து 50 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கிராமப்புற மாணவர் உள்பட அனைவரையும் திருப்திபடுத்த ஏதுவாக கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அமைச்சர் அளித்த விளக்கத்தில், கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.

10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது :

12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்

கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.

11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.

இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்.

அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.

தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் செலுத்தவில்லை  என்றோ, ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அனுமதிக்கவில்லை என்றோ புகார் வந்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.