சென்னை:
மிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நிறைவுபெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 79 மையங்களில் , ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்துவது மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் பணிகள் முடிந்து, +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

அதில், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உறுதிமொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள மாணவர்கள் 14,417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.