ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வீட்டில் இருந்த கிணற்றில் ஏராளமான எலும்பு கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ்2  மாணவி ஒருவர் காணாமல் போனார். அவரை தேடி வந்த பெற்றோர், காணாமல் போனது குறித்துரு காவல்துறையினரிடமும் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், அந்த மாணவியின் கைபை  பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப் பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் சோதனை செய்தனர்.

அப்போது, கிணற்றில் இருந்து மாயமான மாணவியின் உடல் மீட்கப்பட்டது. மேலும் கிணற்றில் தீயணைப்பபு துறையினர்  தூர் வாரிய போது ஏராளமான எலும்பு கூடுகள் கிடைத்தன.

இதைத்தொடர்ந்து,  கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனை மடக்கிய  போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது  பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

கிராமப்புறமான அந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால், அங்கிருந்து பக்கத்து ஊர்களுக்கு படிக்க செல்லும்  மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றினுள் வீசி வந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் மோனிஷா என்பவர் காணாமல் போன நிலையில், அவரையும் பலாத்காரம் செய்து உடலை கிணற்றினுள் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர்   சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.