சென்னை: தமிழகத்தில் தற்போது, 12,520 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது  என தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், போதுமான தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதிகபடியான தடுப்பூசிகளை அனுப்ப மத்தியஅரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 27.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது,

மத்தியஅரசு இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் போடுவதற்காக 73 லட்சத்து 63 ஆயிரத்து 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. இதில், 4,310 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. அதேபோல் 14 லட்சத்து 90 ஆயிரத்து 540 கோவாக்சின் தடுப்பூசிகளில் தற்பொழுது 6 ஆயிரத்து 620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மத்தியஅரசிடம் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பெறப்பட்ட 88 லட்சத்து 53 ஆயிரத்து 690 தடுப்பூசிகளில், 10 ஆயிரத்து 930 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாடு அரசின் சார்பில் 18 முதல் 44 வரை வயது உள்ளவர்களுக்கு போடுவதற்காக பெறப்பட்ட 11 லட்சத்து 18 ஆயிரத்து 530 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 740 கோவாக்சின் தடுப்பூசிகள் என 13 லட்சத்து 10 ஆயிரத்து 270 தடுப்பூசியில் தற்போது கையிருப்பில் 1,590 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில்  8ந்தேதி மாலை  நிலவரப்படி 12 ஆயிரத்து 520 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.