சுரேந்திர நகர்

குஜராத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

நாடெங்கும் ஆழ்துளைக் கிணறுகளைச் சரிவர மூடாததால் அவற்றில் சிறார்கள் விழுவது அதிகரித்து வருகிறது.   ஒரு சில நேரங்களில் மட்டுமே இந்த குழந்தைகள் உயிருடன் மீட்கப்படுகின்றனர்.  இது குறித்து அரசு பலமுறை பல விதங்களில் அறிவுறுத்தியும் இந்த நிகழ்வுகள் தொடர்கின்றன.

அவ்வகையில் குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தின் கஜநப் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வரும் மனிஷா என்ற 12 வயது சிறமி. நேற்றுகாலை 7.30 மணி அளவில் தோட்டத்திற்குச் சென்றுள்ளார் எதிர்பாராமல் இந்த சிறுமி சுமார் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து 60 அடி ஆழத்தில் சிக்கித் தவித்துள்ளார்.

தகவல் அறிந்த காவல்துறை,  சுகாதாரத்துறையினர் ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்புப் பணியில் இறங்கினர்.  மனீஷாவின் நிலை படக்கருவி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு மீட்புப் பணி நடந்தது.  கிணற்றுக்குள் அவருக்குத் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.அவர் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.   சிறுமி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.