ayalalitha-karunanidhi-600
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தி.மு.கழக ஆட்சியில், ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது என்பதற்காக ஜெயலலிதா வின் அ.தி.மு.க. ஆட்சியில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் அதனை குழந்தைகள் மருத்துவமனை யாகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நீதிமன்றக் கண்டனங்களாலும், தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்களின் கடும் எதிர்ப்பாலும் நிறுத்தப் பட்டது.
இந்நிலையில், நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வாங்காமலும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்காமலும் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது.
29.10.2015 அன்று தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப் பட்டு, நூலகம் பராமரிக்கப்படுகிறதா என நீதிமன்ற ஆணையாளர்கள் ஆய்வு செய்து 8.1.2016 அன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணா நூலகம் தொடர்பான வழக்கு 15.4.2016 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “உயர்நீதி மன்றம் பலமுறை உத்தர விட்டும், அண்ணா நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்பட வில்லை” என்று எடுத்துரைத்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், “தமிழக அரசின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன்? அரசுக்கு விருப்பம் இருந்தால் 48 மணி நேரத்தில் எதையும் செய்து முடிப்பீர்கள். இல்லாவிட்டால் எதுவும் செய்ய மாட்டீர்கள். உங்கள் பணி எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஜூன் 30ஆம் தேதி வரை இறுதிக் கெடு விதிக்கிறோம். அதற்குள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துப் பராமரிக்கத் தொடங்கும்” என்று தமிழக அரசை உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.
அண்ணா நூலகத்தைப் பொறுத்தவரை, சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது இது முதல் முறையல்ல; பல முறை கண்டனம், கடும் கண்டனம், எச்சரிக்கை எனத் தெரிவித்திருந்த போதிலும், அவற்றைப் பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் கவலை கொள்ளவோ, உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து உரிய நடவடிக்கை எடுக்கவோ இல்லை. இப்படி அண்ணா நூலக வழக்கில் மட்டுமல்ல, வேறு பல வழக்குகளிலும் அ.தி.மு.க. அரசின்மீது தொடர்ந்து கண்டனக் கணைகள் பாய்ந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுகளுக் காக, ஒருசில வழக்கு களை மட்டும் இங்கே விளக்குகிறேன்.
ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக சென்னை தீவுத்திடலை தயார் செய்யும் முறைகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “அ.தி.மு.க.வுக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவும் மீறப்பட்டுள்ளது” என்று எடுத்துரைத்ததை ஏற்று, கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் சட்ட ஆணையர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் குழு ஒன்று தீவுத் திடலுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்திட உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம், “தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்று 7-4-2016 அன்று வழங்கிய உத்தரவை தேர்தல் ஆணையமும் முறையாக அனுசரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி கற்பதில், வசதிகள் குறைந்த கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் நிறைந்த நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருந்து வந்த பாகுபாட்டை அகற்றிடும் நோக்கத்தோடு, கழக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சமச்சீர் கல்வி. 2011ல் அ.தி.மு.க. வினர் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வியில் கை வைத்தனர். கழக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட முற் போக்குத் திட்டமாயிற்றே? பாகுபாட்டினை அகற்றி, சமநீதி வழங்கி, சமன் பாட்டை உருவாக்கிடும் முயற்சியாயிற்றே? சும்மாயிருப்பார்களா அ.தி.மு.க. ஆட்சியினர். சமச்சீர் கல்வியைச் சாகடிக்க முயன்ற சண்டாளத்தனம் தொடர்பான பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
19-7-2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம், “சமச்சீர் கல்வியின் தரம், நிறைவேற்றும் முறை பற்றி ஆய்வு செய்திடத்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைச் செய்யாமல், திட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றலாமா, அடுத்த ஆண்டு நிறைவேற்றலாமா என்று ஆராய்ச்சி நடத்த உத்தரவிடவில்லை. அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு அறிக்கை கொடுக்கிறது. சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது” என்று உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசை கடுமையாகக் கண்டித்தது.
இந்திய மருத்துவக் கல்விக் கவுன்சில் விதிகளின்படி, மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ மனைகளில் தீயணைப்பு மற்றும் தீ தடுப்புச் சாதனங்கள், சாய்தளப் பாதை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அரசுத் தரப்பில் எவ்வித பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட வில்லை. அதற்குக் கால அவகாசம் கோரியபோது, அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோல கால அவகாசம் கேட்பது சரியானதல்ல” என்று கண்டனம் தெரிவித்ததோடு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாள ருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மதுரையில் உள்ள இளம் சிறார் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று வெளியான தகவலின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் தமிழக அரசின் சமூக நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில், “திருச்சி யில் சிறார் காப்பகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது” என்பது உள்ளிட்ட விவரங் களைக் கூறியிருந்தார். இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், “நாங்கள் மதுரை சிறார் காப்பகம் குறித்து விவரங்கள் கேட்டால், சமூக நலத்துறை அதிகாரி திருச்சியில் கட்டப்பட உள்ள காப்பகத்தின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று கண்டனம் தெரிவித்தனர். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு என்ன விலை? என்ற பழமொழியைப் போலல்லவா இருக்கிறது ஜெயலலிதா அரசின் பதில்!
சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 2014, ஜூன் 28ம் தேதி பதினோரு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 தொழிலாளர்கள் பலியாகினர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மேலும் கட்டிடம் இடிந்தது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் நடந்த விசாரணைக் கமிஷனின் அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டுமென்றும் மு.க.ஸ்டாலின் கேட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், “ரகுபதி விசாரணைக் கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்யக் காலதாமதம் செய்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்” என்று ஜெய லலிதா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தருமபுரியில் ஒரு பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டு, கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அந்த வழக்கில் இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன் என்பவர் சிறையில் இருந்து வெளிவந்த உடன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி அவரைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “சிறைத் தண்டனை பெற்றவர் எப்படி கூட்டுறவுச் சங்கத் தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப் பட்டார்” என்று கண்டனம் தெரிவித்தது.
தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டும், அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை. தமிழக அரசின் இத்தகைய அலட்சியப் போக்கினைக் கண்டு சினம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இரண்டு துறை களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் மூன்றாவது முறையும் உயர் கல்வித் துறையின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், கோபமுற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கு மீண்டும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இன்னும் இவைபோன்ற ஏராளமான வழக்குகள்! நீதிமன்றங்களின் கண்டனங்கள், எச்சரிக்கைகள், இடித்துரைகள், அபராதங்கள், நேரில் ஆஜராக வேண்டும் என்ற நெருக்கடிகள் ஆகியவை ஓர் அரசைக் கூனிக் குறுகச் செய்திட வேண்டிய – வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகளாகும். இப்படிப்பட்ட வெட்கக்கேடான திருப்பங்களை மிக அதிகமான வழக்குகளில் சந்தித்து வருவது இந்தியாவிலேயே ஜெயலலிதா அரசு மட்டும்தான் என்பது தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பது ஆகாது; சிறுமையிலும் சிறுமை ஏற்படுத்துவது ஆகும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் அ.தி.மு.க. அரசு சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை; நீதிமன்றக் கண்டனங்கள் யாவும் நெடுஞ்சுவர் மீது எய்யப்பட்ட அம்புகள் என எண்ணி, விலகி நின்று ஜெயலலிதா அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!’’என்று தெரிவித்துள்ளார்.