அதானியுடன் மோடி
அதானியுடன் மோடி

ருப்பு விலை உயர்வு குறித்தபிரச்சனை மீண்டும் பூதாகரமாக கிளம்ப துவங்கியிருக்கிறது. இப்போது பருப்பு விலைநிர்ணயம் மற்றும் பருப்பை இருப்பு வைத்துக் கொள்வதற்காக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென விதிமுறைகளை தளர்த்தியது போன்ற விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டினை அகில இந்திய விவசாயிகள் சங்கம் எழுப்பியிருக்கிறது. பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து பெரும் நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள அனுமதித்ததை தொடர்ந்து, பருப்பு கிலோஒன்றுக்கு வெறும் 40 ரூபாய் மட்டுமே விவசாயிக்கு கொடுத்த பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், அதை வெளி மார்க்கெட்டில் 180 ரூபாய் அதிகம் விலைவைத்து மொத்தம் 220 ரூபாய்க்குவிற்று பல்லாயிரம் கோடி ரூபாய்கொள்ளையடித்தன, இதற்கு மத்திய அரசு உறுதுணையாக நின்றது என இந்த மெகா பருப்புஊழலை விளக்குகிறது விவசாயிகள் சங்கம். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 17 அன்று தில்லியில் அதன் தலைவர் அம்ராராம் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாய நிலைமை குறித்து இந்தக் கூட்டம் விரிவாக ஆய்வு செய்தது. தமிழகம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்கள் சமீபத்திய கனமழை – வெள்ளம் காரணமாக மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மறுபுறத்தில் நாட்டின் மொத்தமுள்ள 676 மாவட்டங்களில் 302 மாவட்டங்கள் வரலாறு காணாத வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. மிகப் பெருமளவில் பயிர்கள்கருகிப் போனதால் விவசாயிகள் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.இத்தகைய பின்னணியில்தான் மிகப்பெருமளவில் விவசாயிகளிடமிருந்து பருப்பு வகைகளை கொள்முதல் செய்த தனியார் பெரும் கம்பெனிகள், விவசாயிக்கு கொடுத்ததை விட5 மடங்கு கூடுதலாக விலைவைத்து மக்கள் தலையில் விலையை ஏற்றி விற்று கொள்ளை லாபமடித்த விபரங்களும் வெளியாகியுள்ளன. ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார் 24 மில்லியன் டன் பருப்பு வகைகள் உட்கொள்ளப்படுகின்றன. அந்தக் கணக்கின்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4 மில்லியன் டன் பருப்பை விற்றவகையில் மட்டும் ஒரு கிலோவிற்கு ரூ.180 கொள்ளையடித்துள்ளன பெரும் நிறுவனங்கள்.இந்த விபரத்தை வெளியிட்டுள்ள விவசாயிகள் சங்கம், இந்தக் கொள்ளையை மத்திய பாஜக தலைமையிலான மோடிஅரசின் ஆதரவோடு நடத்தியபெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பெயர்களையும்

வெளியிட்டுள்ளது. குறிப்பாக மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானியின் விவசாய மார்க்கெட்டிங் கம்பெனியான அதானி- வில்மர் நிறுவனம் தனது ‘பார்ச்சூன்‘ நிறுவனத்தின் மூலம்பருப்பு வகைகள் மற்றும் எண் ணெய் வகைகளை விற்பதற்காக பல லட்சம் டன் பருப்பு வகை களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. ஆனால், கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.40மட்டுமே விவசாயிக்கு வழங்கி விட்டு, அதே பருப்பை பாக்கெட் போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220 என்ற விலையில் விற்று சம்பாதித்துள்ளது. விலை ஏறும் வரையில் அதானியின் பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளையும் பதுக்கியது என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அதானி – வில்மர் மட்டுமின்றி, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய வர்த்தக நிறுவனங்களும், பருப்பு இருப்பு வைத்துக் கொள்வதற்கான வரையறையை அரசு தளர்த்தியதை காரணமாகக் கொண்டு, மிகப் பெருமளவில் பதுக்கி விலையை ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே, விவசாயிகளிடமிருந்து கூடுதல் பருப்பை கொள்முதல் செய்யப் போவதாக கூறிக் கொண்ட மத்திய அரசு, மிகவும் தாமதமாக ஒரு வாரத்திற்கு முன்பு, 2015 – 16 பருவத்திற்கான துவரம் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4625 என்றும், பாசிப் பருப்பு ரூ.4825 என்றும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து அறிவித்துள்ளது. அதாவது விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.46 மற்றும் ரூ.48 என்ற அளவில் மட்டுமே இதில் கிடைக் கும். இதனால் விவசாயிக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக வெறும் ரூ.1 மட்டும் கொடுத்து இதே அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன. அந்த ஒட்டுமொத்த பருப்பையும், அந்த நிறுவனங்கள் பதுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனிடையே, உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில்,

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளை நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் கையாளுகிற மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினையும், அதே அதானி நிறுவனத்திடமே மோடி அரசு கொடுத்துவிட்டதும் என்பதும் கவனிக்கத்தக்கது.2014 – 15ம் ஆண்டில் இந்தியாவின் பருப்பு உற்பத்தி மொத்தம் 17.20 மில்லியன் டன்னாக வீழ்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 19.25 மில்லியன் டன் அளவிற்கு பருப்பு உற்பத்தியானது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக நடப்பு நிதியாண்டில் சுமார் 4 மில்லியன் டன் அளவிற்கு வெளிநாடுகளி லிருந்து பருப்பு இறக்குமதி செய்திட அரசு உத்தரவிட்டது. இது அக்டோபர் மாத இறுதியில் நடந்தது. ஆனால் அதற்கு முன்பே அக்டோபர் இரண்டாவது வாரத்தில், நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் வந்திறங்கும் பருப்பை கையாளுகிற பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம்என்ற அமைப்புடன் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொரு ளாதார மண்டலம் எனும் மிகப் பெரும் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் படி நாட்டின் 7 துறைமுகங்களில் அதானி நிறுவனம் சொந்தமாக வைத்துள்ள துறைமுக டெர்மினல்களுக்கே வெளிநாடுகளின் பருப்பு வந்திறங்கும் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முந்த்ரா, டாகெஜ், கண்ட்லா, கஜீரா (இவை நான்கும் குஜராத்தில் உள்ளன), தம்ரா (ஒரிசா), மர்மகோவா (கோவா) மற்றும் விசாகப்பட்டினம் (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய 7 துறைமுகங்களிலும் பருப்பு இறக்குமதி கையாளப்படும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது. குறிப்பாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும்கருங்கடல் பிரதேச நாடுகளிலிருந்து சுமார் 5 மில்லியன் டன் பருப்பு, மேற்படி அதானி குழும துறைமுகங்களுக்கு வந்து சேரும் என்றும் இறுதி செய்யப்பட்டது. இந்த பருப்பை கிலோ ஒன்றுக்கு ரூ.185 விலையில் சில்லரை சந்தையில் விற்பனை செய்யவும் அதானி குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே பருப்பு விலை எந்த விதத்திலும் இறங்காமல் விண்ணிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த பருப்பும் தற்போது அதானி நிறுவனத்தின் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த பருப்பை கொண்டு, அதானி குழுமம் கோடி கோடியாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது, திட்டமிட்டு உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை உருவாக்கப்பட்டுள்ளது

(பார்த்திபனின் முகநூல் பதிவு)