mugastalin1
தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 23-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை சென்னையில் தொடங்குகிறார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 234 தொகுதிகளுக்கும் சென்று வந்து விட்டார். அடுத்தக் கட்டமாக அவர் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
முதல்வர் ஜெயலலிதா நாளை அருப்புக்கோட்டை கூட்டத்தில் பேசும் நிலையில் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் இன்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். மதுரையில் தங்கும் அவர் நாளை பிற்பகல் 3 மணிக்கு மதுரை ஒத்தக்கடையில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 3.30 மணிக்கு மேலூர் சென்று வாக்காளர்களை சந்திக்கிறார்.
மாலை 4 மணிக்கு மதுரையில் ஆதரவு திரட்டுகிறார். அதன் பிறகு சிந்தாமணி, ஆரப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்ம், சோழவந்தான் ஆகிய ஊர் களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இரவில் உசிலம் பட்டியில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
பிறகு இரவு தேனி சென்று தங்குகிறார். நாளை மறுநாள் (16–ந்தேதி) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். தலைவர்களின் போட்டி பிரசாரம் தேர்தல் களத்தில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.