mayavathi
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி மீது கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சி.பி.ஐ. சார்பில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சி.பி.ஐ. கோர்ட்டில் இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடந்தது. இதற்கிடையே தன்மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகாவும் எனவே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் மாயாவதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் சி.பி.ஐ. சார்பில் பதில் மனு தாக்கல் செய்ததில் முறைப்படி சொத்து கணக்கு தாக்கல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருப்பதை கோர்ட்டில் சி.பி.ஐ. குறிப்பிட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனுதாக்கல் செய்யப்பட்டது. மாயாவதி சார்பில் வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி அரசியல் காரணங்களுக்கு வழக்கு தாக்கல் செய்து இருப்பதாக வாதிட்டார் இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான புதிய ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.