mobile phne
அன்பைப் பேண… அலைபேசியை மற…
சாப்பாட்டு நேரத்தின்போது கூட உங்கள் கைபேசியை கீழே வைக்க இயலாமல் தகவல் தொழிநுட்பத்தோடு ஒன்றி இருப்பவரா நீங்கள் ? இதனை கண்டிப்பாக படிக்கவும்
தங்களின் அத்தகைய செய்கை உங்கள் குழந்தைகளுக்கு அதிருப்தியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
ஆம். பெற்றோர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் தருணங்களில் தொழில்நுட்பத்தை அளவாக உபயோகிக்க வேண்டும் எனப் பிள்ளைகள் நினைக்கின்றனர் .
பெற்றோர்கள் வண்டி ஓட்டும்போது அவ்வப்போது குறுஞ்செய்தி அனுப்புவதோ அல்லது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்வதோ குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை எனத் தொழில்நுட்பம் மற்றும் குடும்பத்தின் இயக்கியல் ஆய்வின் முடிவு தெளிவாகக் கூறுகிறது .
முந்தையக் காலக்கட்டத்தில் வானொலி, தொலைக்காட்சி , வீடியோ கேம்ஸ் போன்ற தொழில்நுட்பங்களும் குடும்பங்களுக்கு இடையில் தடைகளாக அமைந்ததை ஆராய்ச்சியாளர்கள் நினைவு கூர்கின்றனர். மேலும் கடந்த சில வருடங்களில் தொழில்நுட்பத்தின் அசூர வளர்ச்சியின் காரணமாகக் குறிப்பாக இணையத்தின் வருகை காரணமாக மக்களுக்கிடையில் குறிப்பாகக் குடும்ப உறவுகளுக்கிடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது .
இதைப் பற்றி ஆய்வாளர் கூறுகையில் , “தொழில்நுட்ப உபயோகிப்பிற்கு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விதிக்கும் விதிமுறைகளைத் தாங்களே பின்பற்றுவதற்கு மிகவும் சிரமமாகவும் சவாலாகவும் இருக்கிறது “.
குழந்தைகளின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பத்திற்கு எதிராக விதிமுறைகளை நிறுவுவதும் அதனைச் செயல்படுத்துவதும் பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கிய விசாரமாக இருப்பது யாதெனில் தொழில்நுட்பத்திற்கு பதிலாகத் தம்மைச் சுற்றி இருப்பவர்களிடத்தில் கவனத்தை செலுத்துவது .
இதுகுறித்து ஒரு ஆய்வினை மிஷிகன் பல்கலைகழகத்திலிருந்தும் வாஷிங்டன் பல்கலைகழகத்திலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். 249 அமெரிக்க குழந்தை-பெற்றோர் ஜோடிகளை வைத்துக் குறிப்பாக 10-17 வயதிற்குற்பட்ட குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றக்கோரி ஒரு கணக்கெடுப்பு நடத்தினர் .
கீழ்க்கண்டவை அவ்வாய்வின் முக்கிய முடிவுகளாகும் :
1. பெற்றோர்கள் தங்களிடத்தில் பேசும்பொழுது அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்று 92 சதவிகித குழந்தைகள் விரும்புகின்றனர்.
2. சமூக வலைதளங்களில் தங்களுடைய சம்மதமின்றி தங்களைப் பற்றி எவ்விதப் பதிவுகளையும் செய்யக் கூடாது எனவும் குழந்தைகள் விரும்புகின்றனர்.
3. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்மீது நம்பிக்கை வைப்பதுடன் தங்களின் எல்லைகளைத் தாமே வகுத்துக்கொள்ள ஊக்குவிக்கவேண்டுமென விரும்புகின்றனர்.
4. தம்முடைய பெற்றோர் முழுநேரத்தையும் கணினி, அலைப்பேசி போன்றவற்றில் செலவிடுவதையும் குழந்தைகள் விரும்பவில்லை
5. பெற்றோர் வாகனம் ஓட்டுகையில்அலைப்பேசி பயன்படுத்துவதை விடத் தங்களுடன் செலவழிப்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர்.
6. எல்லாவற்றினும் மேலாக குழந்தைகளுக்குப் போதிக்கும் அறிவுரைகளைப் பெற்றோர் முதலில் ஒழுங்காக பின்பற்ற வேண்டும்
பெற்றோர் தங்களுடைய செய்கைகளின் மூலமே குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை போதிக்கமுடியுமே தவிர அதட்டல் மிரட்டல் மூலமாக அவர்களை நல்வழிப் படுத்த முடியாது என்பதை பெற்றோர் உணர்வது அவசியம். ஏனெனில் குழந்தைகளுக்கு பெற்றோர்தான் முதல் முன்னுதாரணம் ஆவர்.