krisna1
புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் 16–ந்தேதி வெளியிடப்படும்: கிருஷ்ணசாமி தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டணி கட்சியினரின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 3 காரணங்களும் தி.மு.க.வின் வெற்றியை பிரகாசமடைய செய்துள்ளது.
கடும் வெயிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் கூடுவதை தேர்தல் கமிஷன் அனுமதிக்கக்கூடாது. பணப்பட்டுவாடாவை தடுக்க நவீன யுக்திகளை கையாள வேண்டும். குறிப்பாக 144 தடை உத்தரவு, மின்தடை ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இருக்க வேண்டும். மின் பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய தொகுப்பில் இருந்து தேவையான மின்சாரத்தை பெற தேர்தல் ஆணையமே நடவடிக்கை எடுத்து மின்தடை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
வருகிற 16–ந்தேதிக்குள் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.