லாகூர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தார். ஆனால் அதே வழக்கில் அவரை துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது கட்சியினர் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் நாடெங்கும் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். லாகூரில் ராணுவ உயர் அதிகாரியின் வீடும் தாக்குதலுக்குத் தப்பவில்லை.  இம்ரான்கான் கைதைத் தொடர்ந்து லாகூரில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   அந்த வழக்குகளில் அவருக்கு லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று முன் ஜாமீன் வழங்கியது.

இம்ரான்கான் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம்,

“கடந்த 35 ஆண்டுகளில் இப்போது நடப்பது போலக் கைது நடவடிக்கைகளை நான் பார்த்தது இல்லை. எல்லா மனித உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் முடிவுக்கு வருகின்றன. நீதிமன்றங்கள்தான் மனித உரிமைகளை இப்போது காத்து வருகின்றன. ஆனாலும் கடைசி பந்துவரை நான் போராடுவேன்” .

எனக் குறிப்பிட்டார்.