டில்லி

த்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக ஆங்கில ஊடகமான “தி ஒயர்” செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.   தற்போது சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் தனது பணிகளை வீட்டில் இருந்தபடியே கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.    உறுதி செய்யப்படாத இந்த தகவல்களை தொடர்ந்து தற்போது ஆங்கில செய்தி ஊடகமான “தி ஒயர்” தற்போது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடுமையான நீரிழிவு (சர்க்கரை) நோயால் அவதிப்பட்டு வருகிறார்.     கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பரில் அவருக்கு எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.    இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.   ஆயினும் அவருக்கு இதை தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாயிற்று.    அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 17 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் அவருடைய சிறுநீரகங்கள் நன்கு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையவில்லை.   அதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் அவர் எங்கும் வெளியில் செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவித்தனர்.  அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் நோய்த் தொற்றுக்களை தவிர்க்க வீட்டில் இருந்தபடி பணி புரிய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.    மேலும் அவரது சிறுநீரகங்கள் முழுமையாக பழுதடைந்துள்ளதால் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

அதனால் அவருக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.  இதற்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள இதய மற்றும் சிறுநீரகப் பிரிவில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   இந்த அறுவை சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயக்குனர் ரந்தீப் குலேரியாவின் சகோதரரும்,  அப்போலோ மருத்துவமனையின் மருத்துவருமான சந்தீப் குலேரியா நடத்த உள்ளார்.    அதே நேரத்தில் இந்த அறுவை சிகிச்சையை சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் நடத்த மாற்று ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறு தி ஒயர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.