கிம்பூர்

விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தியை சீதாபூர் என்ற இடத்தின் அருகே காவல்துறையினர் கைது செய்து விருந்தினர் மாளிகையில் சிறை வைத்தனர். இதனால் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதையொட்டி உபி அரசு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க பிரியங்காவுக்கும் ராகுலுக்கும் அனுமதியளித்தது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்காக லக்னோ விமானநிலையத்திற்குச் சென்றனர்.

அவர்களை அங்கிருந்து லக்கிம்பூருக்கு தங்களது வாகனங்களில் புறப்படத் திட்டமிருந்த நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தங்களது வாகனங்களில் வரும்படி வற்புறுத்தினர். இதை மறுத்த ராகுலும் இதர தலைவர்களும் லக்னோ விமானநிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை லக்கிம்பூர் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

சீதாபூரில் சிறைக்காவலில் இருந்த பிரியங்கா விடுவிக்கப்பட்டதால் அவரை ராகுல் தனது காரில் அழைத்துக்கொண்டு லக்கிம்பூர் சென்றார். அனைத்து தலைவர்கள் தங்களது கார்களில் லக்கிம்பூருக்கு சென்றடைந்தனர். அங்கு அவர்கள் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பிரியங்கா காந்தி இது குறித்து, “விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி தேவையில்லை,  நீதி வேண்டும். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அது சாத்தியமில்லை. அஜய் மிஸ்ரா பதவியில் இருந்தால் பாரபட்சமற்ற விசாரணைக்குச் சாத்தியமில்லை. எங்களை எஃப்.ஐ.ஆர் இல்லாமல் கைது செய்யும் போது அவர்கள் ஏன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய முடியாது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.