dr death
வாஷிங்டன்:
அளவுக்கு அதிகமான மாத்திரைகளை வழங்கி 36 நோயாளிகளின் இறப்புக்கு காரணமான இந்திய வம்சாவளியை சேர்ந்த மனநல மருத்துவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா கிலேடன் கவுன்டியை சேர்ந்தவர் நரேந்தர நாகரெட்டி. மன நல மருத்துவரான இவரது அலுவலகத்தில் அந்நாட்டு மருந்து அமலாக்க நிர்வாக முகமை, கிலேடன் கவுன்டி மாவட்ட வக்கீல், போலீசார் அடங்கிய 40 பேர் கொண்ட குழு திடீர் சோதனை நடத்தினர். பின்னர் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
‘‘ஜோனேஸ்போரில் இவர் பணியாற்றியபோது, இவரால் வழங்கப்பட்ட அளவுக்கு மீறிய மாத்திரைகளை சாப்பிட்ட 36 பேர் இறந்துள்ளனர். இதில் 12 பேர் போதை மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், இவரிடம் ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களும் மருந்து மாத்திரைகளின் தாக்கத்தை குறைப்பதற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்று போலீசார் ஒரு செய்தி டபிள்யூஎஸ்பி சேனலுக்கு தெரிவித்துள்ளனர்.
‘‘ நோயாளிகளுக்கு தேவையில்லாமல் மருந்துகளை வழங்கியுள்ளார். இவரது மனநல துறைக்கு தொடர்பில்லாமல் வலி நிவாரண மருந்துகளை வழங்கியுள்ளார். இவர் மருந்து தொழிற்சாலை நடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது வீட்டில் சோதனை நடத்தவும், அவரை கைது செய்யவும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர் ‘டாக்டர் டெத்’ ஆக்கப்படுவார்’’ எனவும் போலீசார் தெரிவித்தனர்.
‘‘மருத்துவ துறையின் அடிப்படையில் நோயாளிகள் இறப்பது குற்றமாக கருதப்படுவதில்லை. அதனால் மருத்துவ பயன்பாட்டில் அவர் ‘டாக்டர் டெத்’ ஆக கருதப்படுகிறார். இதன் பிறகு இவர் மருத்துவராக பணியாற்ற முடியாது’’ என மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.