velicham-tv-open-Inaugurated
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருதம் டெலிவிஷன் நெட்வொர்க் சார்பில் ‘வெளிச்சம்’ என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகர் விஜய் ஸ்ரீமகாலில் இன்று நடந்தது.
விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் வெளிச்சம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். ஊடக முதன்மை செயலாளர் பனையூர் பாபு வரவேற்றார். கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிகுமார், மாநில பொருளாளர் நூர் முகமது யூசுப் முன்னிலை வகித்தனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ‘வெளிச்சம்’ புதிய தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு திருமாவளவன் பொன்னாடை அணிவித்தார்.