navagraha-yantra-500x5001.சூரியன்:-
எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!
சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.
உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.
2.சந்திரன்:-
‘சந்த்ரமா மனஸோ ஜா’ என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலை கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.
கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!
3.செவ்வாய்:-
செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும்.
ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய். செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாயின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது. கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.
4.புதன்:-
சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனை கொண்டே கணிக்கப்படுகிறது.
பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.
5.குரு:-
குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர் குரு.
புத்திரர், அறிவு, மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.
இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.
6.சுக்கிரன்:-
சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.
அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.
ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணமாக சுக்கிரன் விளங்குகிறார்.
7.சனி:-
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே.
ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர். வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள், தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை, இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
8.ராகு:-
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.
ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார். சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.
விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, சிறைப்படல், மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.
9.கேது:-
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.
கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.
இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயற்படும். விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை.

– முகநூல் பதிவு