பாட்னா: நான் பாட்னாவில் ஒரு பான் கடைக்குச் சென்றால்கூட, எனக்கு கூடுகின்ற மக்கள் கூட்டம், மோடிக்கு கூடிய கூட்டத்தைவிட அதிகமாக இருக்கும் என்று பீகாரின் முன்னாள் முதல்வரும், பிரபல மூத்த அரசியல்வாதியுமான லாலுபிரசாத் யாதவ் நக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் இந்தக் கூட்டத்தை சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், இந்நிகழ்ச்சிக்கு கூடிய குறைவான கூட்டம் குறித்து கிண்டல் செய்த லாலுபிரசாத் கூறியதாவது, “பாட்னாவில் ஒரு பான் கடையில் நான் போய் நின்றால்கூட, மோடியின் நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டத்தைவிட அதிக கூட்டம் கூடிவிடும் எனக்கு! ஆனால், இரண்டு ஆளுங்கட்சிகளின் சக்தியை வைத்து திரட்டியும் அவர்களால் குறைந்தளவு கூட்டத்தைதான் திரட்ட முடிந்துள்ளது என்பதை நினைக்கும்போதே, பீகாரில் அவர்களின் செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசு இதன்மூலம் நன்றாக வெட்டவெளிச்சமாகியுள்ளது. தங்களுக்கு வந்த குறைவான கூட்டத்தை, கேமரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிகப்படுத்திக் காட்ட முயற்சித்துள்ளனர்” என்றார்.

– மதுரை மாயாண்டி