r

பொதுத்தேர்தலை மிஞ்சிவிட்டது, நடிகர் சங்கத் தேர்தல். ஆளாளுக்கு கடுமையாக விமர்சனம் செய்துகொண்டார்கள்… ஊழல் புகார்கள், அவதூறு பேச்சுக்கள் என்று  களைகட்டிக்கொண்டிருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்.

இந்த நிலையில், நடிகரும் முன்னாள் எம்.பியுமான ரித்தீஷ்  மீது  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று மாலை ஏராளமான திரை  மற்றும் நாடக  நடிகர்-நடிகைகள் நடிகர் எம்.ஏ. கிச்சா ரமேஷ் தலைமையில் வந்தார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய கிச்சா ரமேஷ்,  ” சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகரில் வசிக்கும் நான்  திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில்,  தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். என்னுடன் ஏராளமான நாடக மற்றும் திரை நடிக நடிகையரும் சரத்துக்கு  ஓட்டு சேகரித்து வருகிறோம்.

இதனால் எதிர்  அணியைச் சேர்ந்த நடிகர் ரித்தீஷ், பூச்சிமுருகன் மற்றும் நடிகர் விஜய் கார்த்திக் ஆகியோர் எங்களை தொடர்ந்து  மிரட்டி வருகிறார்கள். ஏற்கனவே தி.மு.க.எம்.பி.யாக இருந்த ரித்தீஷ்   இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த பூச்சிமுருகனுடன் சேர்ந்து எங்களை மிரட்டுகிறார். இந்த நிலையில் எனது செல்போனில் வட பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல பேசிய நடிகர் ரித்தீஷ்   என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அந்த  செல்போனில் பதிவை சி.டி.யாக போட்டு காவல் துறையினரிடம் கொடுத்துள்ளேன்.  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கிச்சா ரமேஷ் உடன் வந்திருந்த மற்ற நடிகர்-நடிகைகள் தங்களுக்கும் மிரட்டல் வருவதாக தெரிவித்தனர். இதுபோன்ற புகார் மனுக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவிலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர் ரித்தீஷை தொடர்புகொண்டு கேட்டபோது, ” என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, என் பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த பொய்ப்புகார்.  வரும் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியினர் நிச்சயம் தோல்வியை தழுவுவார்கள். நீதி வெல்லும்!” என்றார்.

என்னமோ போங்க..!