இன்று  ஜூலை 28.உலகக் கல்லீரல் அழற்சி நாள் ஆக அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), அனுசரிக்கப்படுகிறது. இன்று ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினம் என்பதால் அவரது நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டது.

பல கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் கடும் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் இந்நோயின் தாக்கத்தால் மரணமடைகின்றனர்.

இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட எட்டு மக்கள் நல்வாழ்வுப் பரப்புரைகளில் ஒன்றாகும். உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய் எதிர்ப்புத் திறனூட்டல் வாரம், உலக காச நோய் நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலக மலேரியா நாள், உலக எயிட்ஸ் நாள் ஆகியவை மற்ற 7 நாட்களாகும்.

நம் உடலில் உள்ள இதயம், மூளையைப் போலவே முக்கியமான இன்னொரு உடல் உள் உறுப்பு கல்லீரல். அதே நேரத்தில் இதயம், மூளை ஆகிய உறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், கல்லீரலுக்குக் கொடுக்கப்படுவதில்லை. கல்லீரல் வழியே உடலின் ரத்தம் முழுவதும் தினமும் பல முறை கடந்து செல்கிறது. மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளைக் கல்லீரல் செய்கிறது. மக்கள் குடிப் பழக்கம், தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் காரணமாகக் கல்லீரலைப் பல வகைகளில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள்.

தற்போதைய நிலையில் உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது கல்லீரல் கோளாறுகள்தான். ஒவ்வோர் ஆண்டும் உலகில் 15 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் முக்கிய சிக்கல் என்னவென்றால் கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது உடனே தெரிய வராது. அந்தப் பிரச்சினை தீவிரமடைந்த பிறகே அறிகுறிகள் தெரியவரும். ஆகவே கல்லீரல் நோய்களை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும்.

நமது உடலில் உள்ள கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளை ஹெப்படைட்டிஸ் என அழைக்கிறார்கள். இந்த ஹெப்படைட்டிஸ் கிருமிகளில் ஏ, பி, சி, டி, இ எனப் பல வகைகள் உள்ளன. இந்த கிருமிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தினாலும், அனைத்துமே கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளே ஆகும். வைரஸ் கிருமிகளால் கல்லீரல் பாதிக்கப்பட்டால், கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் உண்டாகும். அது மட்டுமின்றி கல்லீரல் செல்கள் அழற்சி அடைவதாலேயே ஹெப்படைட்டிஸ் வைரஸ் கிருமி தொற்றவும் முடிகிறது.

உலகில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் பாதிப்பால் 50 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த ஹெப்படைட்டிஸ் பி மற்றும், சி பாதிப்பை உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரோசிஸ் (கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்), கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். இதை உலகுக்கு உரத்த குரலில் நினைவூட்டும் நாள் இன்றாகும்.