டில்லி
நேபாள பிரதமர் கே பி ஒளி யோகா நேபாளத்தில் உருவானது எனவும் இந்தியாவில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் உலகெங்கும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி நேபாளத்திலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நேபாள பிரதமர் கே பி சர்மா ஒளி அவருடைய இல்லத்தில் நடந்த யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “நேபாளத்தில் தான் யோகா உருவானதே தவிர இந்தியாவில் இல்லை. இது குறித்த உண்மைகளை இந்திய வல்லுநர்கள் தொடர்ந்து மறைத்து வருகின்றனர். இந்தியா இப்போது இருப்பது போல் முன்பு இல்லை. அந்த நேரத்தில் இந்தியா பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு ராமரின் பிறப்பிடமான உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை எனவும் நேபாளத்தில் உள்ளது எனவும் கே பி சர்மா ஒளி தெரிவித்தார். அந்த உண்மையான அயோத்தி பிர்குஞ்சின் மேற்கில் உள்ள தோரி பகுதியில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது யோகா பற்றிய செய்தி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.