சென்னை: வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் ஸ்டிராங் ரூமில் உள்ள  கண்காணிப்பு காமிராக்கள் அடிக்கடி இயங்காமல்  போகும் மர்மம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும்  நடைபெற்று வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்,  ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி இயங்கவில்லை  என புகார் எழுந்துள்ளது. அதாவது, நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராக்கள் ஒருசேர இயங்கவில்லை.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும்  ஸ்ட்ராங் ரூமில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருக்கும்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த காமிராக்கள் ஒரே சேர இயங்காமல் போவது மர்மத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு பகுதியில் உள்ள ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடங்கள் வரை சில கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரியை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்காமல் போன விவகாரம் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.  குறிப்பிட்ட நேரம் மட்டும் ஸ்டிராங் ரூமில் உள்ள சிசிடிவி காமிராக்கள் திடீரென இயங்காமல் இருப்பது மர்மமாக உள்ளது. யாராவது, வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்கிறார்களா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில், இதுபோன்ற நிகழ்வுகள் எழாதவாறு தடுக்க எவ்வளவோ நவீன யுக்திகள் உள்ள நிலையில், திடீர் திடீரென மொத்த காமிராக்களும் இங்காமல் போவது வியப்பாகவே உள்ளது.