ஹூபளி

ர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தாம் மஜத சட்டப்பேரவை உறுப்பினர் மகனை சந்தித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மஜத சட்டப்பேரவை உறுப்பினர் மகனான சரணகவுடாவுடன் பேசியதாக அந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டது.

அதாவது மஜத சட்டப்பேரவை உறுப்பினர் நாகனகவுடா மகனான சரணகவுடாவை எடியூரப்பா  சந்தித்து ஆட்சியை கலைக்க உதவுவதற்கு பேரம் பேசியதாக குமாரசாமி குற்றம் சாட்டினார்.  அதை எடியூரப்பா உடனடியாக மறுத்தார்.

அந்த ஆடியோ பதிவில் உள்ளது தமது குரல் இல்லை எனவும் யாரோ தன்னைப் போல மிமிக்ரி செய்துள்ளதாக எடியூரப்பா குற்றம் சாட்டினார். இந்நிலையில் இன்று எடியூரப்பா ஹூபளி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடியூரப்பா, “நான் மஜத சட்டப்பேரவை உறுப்பினர் சரணகவுடாவை சந்தித்தது உண்மை தான்” என ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், “முதல்வர் குமாரசாமிதான்  சரணகவுடாவை என்னை சந்திக்க அனுப்பி உள்ளார். அவருடன் என்னை பேச வைத்துள்ளார். அதன் பிறகு அந்த பேச்சில் சில மாறுதல்களை செய்து இந்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

குமாரசாமி மூன்றாம் தர அரசியலை செய்து வருகிறார். அந்த ஆடியோ பதிவு முழுவதும் அவருடைய வசதிக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. நான் பேசியதை வெட்டி ஒட்டி இவ்வாறு செய்துள்ளனர். பல உண்மைகளை இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் அவர்கள் மறைத்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி இந்த ஆடியோ பதிவு குறித்த எந்த ஒரு விசாரணையையும் தாம் எதிர்கொள்ள தயாராக உளதாக்வும் தெரிவித்தார்.

அத்துடன் குமாரசாமி மேல்சபை உறுப்பினர் பதவி அளிக்க ஒருவரிடம் பணம் கேட்ட ஆடியோ பதிவு தம்மிடம் உள்ளதாகவும் அதை திங்கள் கிழமை வெளியிட உள்ளதாகவும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அறிவித்துள்ளதை எடியூரப்பா சுட்டிக் காட்டி உள்ளார்.