சென்னை

கொரோனா தொற்று இல்லாத 4000 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா உள்ளதாக தவறான பதிவேற்றம் செய்த தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள், மற்றும் 198 தனியார் மருத்துவமனைகள், மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இவற்றில் மெட் ஆல் என்னும் தனியார் ஆய்வகமும் ஒன்றாகும்.

மெட் ஆல் ஆய்வகத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் தவறாகப் பதிவேற்றம் செய்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதாகத் தவறான விவரங்களையும் பதிவேற்றம் செய்தது.

இந்த விவரம் தெரியவந்ததும் ஆய்வக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடந்த 21-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்தார்.

இது குறித்து  ‘மெட் ஆல்’ ஆய்வகம் விளக்கம் அளித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   அதில், “ தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் மெட் ஆல் ஆய்வகம் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது.  இதுவரை எங்கள் பரிசோதனைகள், முடிவுகளின் துல்லியத்தில் எவ்வித குறைபாடு,தவறும் கண்டறியப்படவில்லை.

ஆயினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சிலதவறுகள் நடந்துள்ளன. நாங்கள் இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த தவறு முழுக்க தொழில்நுட்ப ரீதியில் நடந்த தவறு ஆகும்.  இவை மெட் ஆல் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட தவறு அல்ல.

தமிழக அரச் கொரோனா பரவலைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து பங்களிக்கவே எங்கள் ஆய்வகம் விரும்புகிறது. இனிமேல் இதுபோன்ற தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எங்களை மீறி ஏற்கெனவே நடந்த சில தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனக் கூறப்பட்டுள்ளது.