மும்பை:

மணிகார்னிகா திரைப்படத்தில் ஜான்ஸி ராணி ,அவமதிக்கப்பட்டிருந்தால், அதில் நடித்த கங்கானா ரனாவுத்தை மகாராஷ்டிராவில் நடமாட விடமாட்டோம் என கார்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.


திரைக்கு வரவுள்ள மணிகார்னிகா இந்தி திரைப்படத்தில் லஷ்மி பாயை பிரிட்டிஷ் அதிகாரியோடு தவறான உறவு வைத்துள்ளதாக சித்தரித்துள்ளதாகக் கூறி, கார்னி சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களுக்கு திரையிட்டுக் காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த நடிகை கங்கனா ரனாவுத், இந்த படத்தை பார்த்து 4 வரலாற்று ஆய்வாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். இந்த தகவல் கார்னி சேனா அமைப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நானும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள் என்பதை போராட்டம் நடத்துபவர்கள் அறிவார்கள். என்னாலும் அவர்களை அழிக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, கார்னி சேனாவின் மகாராஷ்டிர பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், படத்தில் லஷ்மிபாயை களங்கப்படுத்தும் காட்சிகள் இருந்தால், கங்கனா ரனாவுத் மகாராஷ்டிரத்துக்குள் நடமாட முடியாது. அவரை எரிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.